Stalin Announcement: தொழில்முனைவோர் கவனத்திற்கு.. முதலமைச்சர் வெளியிட்ட 5 அறிவிப்புகள் பற்றி தெரியுமா.?

சென்னை அருகே குன்றத்தூரில் நடந்த அரசு விழாவின்போது, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Continues below advertisement

சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த விழாவில் உரையாற்றியபோது, தொழில்முனைவோருக்கான 5 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Continues below advertisement

குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன், 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

மேலும், மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டின் அனைத்து கைவினைக் கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டம், சமூகநீதி, சமநீதி, மனிதநீதி, மனித உரிமை நீதி ஆகியவற்றை நிலைநாட்டக் கூடியது என தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறு, குறு தொழில்களும் தமிழ்நாட்டை முன்னேற்றுவதாக முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சர் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்

இந்த நிகழ்வின் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அவை,

  1. அறிவுசார் சொத்துரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் 25,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  2. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  3. தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க 5 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
  4. காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், 3 கோடியே 90 லட்சம் ரூபாயில், தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும்.
  5. சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படக்கூடிய காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், உழைப்பை செலுத்தி, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விரிவுபடுத்துமாறும், அதன் மூலம் அவர்களும், அவர்களது குடும்பமும் வளர்ந்து, அந்த பகுதியையும் வளப்படுத்துமாறு, தொழில்முனைவோருக்கு அறிவுரை வழங்கினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola