Letter to PM : நெல் கொள்முதல் விதிகளில் தளர்வு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (5-2-2023) எழுதியுள்ள கடிதத்தில்,  ”தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்திடும் வகையில், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு" கேட்டுக் கொண்டுள்ளார்.


”காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாகத் தூர்வாருதல், மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுதல், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்று தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து, குறுவைப் பருவத்தில் 4.19 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தில் 16.43 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா/ நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், துரதிஷ்டவசமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு இலட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று ஆரம்ப மதிப்பீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில், குறுவை பருவத்தில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின்கீழ், மாநில கொள்முதல் முகமையான, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைத் தளர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பருவம் தவறிய இந்த மழையின் தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளர்வு தேவைப்படுகிறது என்றும், அதன்மூலம் நெல் கொள்முதல் பணிகளைச் சீராக செய்து முடிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.


எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை  தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரைக்  கேட்டுக்கொண்டுள்ளார்.