CM Stalin:  ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். 


வெள்ள நிவாரணம்:


 மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சென்னையின் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.  இப்படியான நிலையில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 


இதுதொடர்பான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து வட்டங்களில் வசிப்பவர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படவுள்ளது.  அதேசமயம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் வசிப்பவர்களுக்கு நிவாரணத்தொகை கிடைக்கும். காஞ்சிபுரத்தில் குன்றத்தூர் வட்டத்தில் இருப்பவர்களுக்கு முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள மேவலூர்குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு கிராமங்களில் வசிப்போருக்கு நிவாரண தொகை கிடைக்கப்போகிறது. 


திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் வசிப்போருக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்:


இந்த நிவாரண தொகைக்கான  டோக்கன்களும் விநியோகப்பட்டது. இந்த நிலையில், சென்னை வேளச்சேரி  அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று காலை 10 மணிக்கு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கினார் முதல்வர். 






இதனை அடுத்து, நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை பற்றி எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது, ”மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்...!” என்று குறிப்பிட்டிருந்தார்.