CM Stalin: மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அளித்துள்ளார்.


நிவாரணம் அறிவிப்பு:


இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமணி த.பெ. செண்டாய் என்பவர் கடந்த 31-08-2023 அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்து திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று (2-9-2023) காலை உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.


உயிரிழந்த வீரமணி அவர்களின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


என்ன நடந்தது?


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ராதா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் விவசாயி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று மாங்காய் பறித்துக் கொண்டிருக்கும்போது, கதண்டு என்கிற விஷ வண்டுகள் அவரை கடித்தது. இதனால் அவர் அலறி துடித்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்துள்ளார்.


மேலும், கதண்டுகளை விரட்ட கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கதண்டு கடிப்பதால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.




மேலும் படிக்க 


OPS Meets Rajinikanth: திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் - காரணம் என்ன?