நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  மாபெரும் கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு அமலில் இருந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் மத்திய அரசுக்கு மேலும் இவ்விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கும் வண்ணம் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  மாபெரும் கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் எல்லா விதமான ஊடகங்களிலும் வேலை பார்த்தவன். இப்போது சமூக ஊடகங்களில் கழக கொள்கைகளை எதிரொலித்து கொண்டிருக்கிறேன். இதில் மக்களுடைய கருத்துகளை உடனே தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கருத்துகள் நொடியில் கோடிக்கணக்கானவர்களை தேடி சென்று விடுகிறது. தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல. 


அந்த நோக்கத்தை நாம் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நெகட்டிவ் பிரசாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்து கொள்வது தான் சரி. கூட்டில் இருக்கக்கூடிய புழுக்களை போல கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான். எல்லா விமர்சனங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என நான் சொல்லவில்லை. சமூகத்தை பின்னோக்கி இழுத்து கொண்டிருந்த கிருமிகளை பின்னோக்கி இழுக்க உருவான மருந்து தான் திராவிட இயக்கங்கள். 


கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களையும் எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் எண்ணம் தான் அழிந்திருக்கிறதே தவிர திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது. அப்படி சொன்னவர்கள் எல்லாம் இங்கு தான் வந்து அடைக்கலம் ஆனார்கள் என்பது வரலாறு. 


இன்னைக்கு அதிமுக, பாஜகவுக்கு எதிரான நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நாம் நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது சாதி, மதம் பெயரால் நாட்டை நாசப்படுத்தி விடலாம் என்ற கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். 


பாஜக கொள்கை நமக்கோ, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே எதிரானது. ஏன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது. இவர்களின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைச்ச அடிமை அதிமுக மறுபக்கம் உள்ளது. கொள்கை என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் கொள்கையற்ற கூட்டம் தான் அதிமுக. இனிமேலும் பாஜகவுடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். 


தமிழ்நாட்டை அழிக்க நினைக்க பாஜக, அண்ணா பெயரில் கட்சி நடத்தி அதை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல. சமூக வைரஸ்களை எதிர்த்து தான் நாம் போராடுகிறோம்” என தெரிவித்தார்.