தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தந்தை வேதமூர்த்தி உடல் நலகுறைவால் காலமான நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சபரீசனின் தந்தை:
முதல்வர் ஸ்டாலினின் மருமகனின் சபரீசனுடைய தந்தையின் பெயர் வேதமூர்த்தி. இவர் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். மிகவும் எளிமையான குடும்ப பின்னணி கொண்ட இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற்வர்
உடல்நலக்குறைவால் காலமானார்
சென்னை நீலாங்கரையில் இவர்கள் வசித்து வருகின்றனர் தற்போது சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சென்னை ஓஎமாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபரீசனின் தந்தை வேதமூர்த்தி, சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.
வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக வட்டாரத்தினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்
இந்த நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் எனது மருமகன் திரு. சபரீசன் அவர்களின் தந்தையார் திரு. வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரு. வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் திரு. சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முதல்வரின் சம்பந்தி வேதமூர்த்தியின் இறுதி சடங்கு நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல்வர் பங்கேற்கவுள்ள அரசு நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.