CM Stalin USA: முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில், வேட்டி சட்டை அணிந்து தமிழ் வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.


சிகாகோவில் ஸ்டாலின்:


இந்த நிகழ்ச்சியில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், ”சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


 






முதலமைச்சர் ஸ்டாலின் உரை:


நூற்றுக்கணக்கான தமிழ் வம்சாவளியினர் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும், நமக்கு பாசத்தை ஊட்டியது ஒரே தாய் தமிழ் தாய்.  அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதைப்போல அல்ல அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை உணர்வை தருகிறது" என முதலமைச்சர்  ஸ்டாலின் பேசியுள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:


நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், “இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி - அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்!” என குறிப்பிட்டுள்ளார்.






முதலமைச்சர் அமெரிக்கா பயணம்:


தொழில் முதலிடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 2 வாரங்களுக்கும் மேலான இந்த பயணத்தில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, ஏராளமான தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் மூலம், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான பல் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகின்றன. இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு அங்கமாக தான், தமிழ் வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றியுள்ளார். இதில் ஏராளமான அமெரிக்க வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.