Thiruvanmiyur to Uthandi flyover : திருவான்மியூர் டூ உத்தண்டி வெறும் 10 நிமிடம் தான்.! ரூ.2100 கோடியில் மேம்பாலம்- இவ்வளவு சிறப்பம்சமா.?
Thiruvanmiyur to Uthandi flyover : 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 13.30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மேம்பாலம் திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய, புதிய சாலை திட்டங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் முக்கிய இடமாக இருப்பது கிழக்கு கடற்கரை சாலையாகும். குறிப்பாக திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை எப்போதும் வாகன நெரிசல் காணப்படுகிறது. அதுவும் வார விடுமுறை நாட்கள் என்றால் கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுப்பார்கள். இந்த நிலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சாலை மேம்பாலம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
ரூ.2100 கோடியில் சாலை மேம்பாலம்
அந்த வகையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதமாக சென்னை நகரின் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் சுமார் 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13.30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பால பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
சாலை மேம்பாலத்தின் சிறப்பம்சம் என்ன.?
- 13 கி,மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை மேம்பாலம் பொது–தனியார் பங்களிப்போடு நடைபெறவுள்ளது.இந்த மேம்பாலம், திருவான்மியூரில் ECR–Lattice Bridge சாலை சந்திப்பிற்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- இந்த மேம்பாலம் இருவழியிலும் பயணம் செய்யும் வகையில் அகலமான பாலமாக அமையவுள்ளது. 17.25 மீட்டர் அகலத்துடன், 5.5 மீட்டர் உயரத்தில், நான்கு வழித்தட சாலை மேம்பாலம் முழு நீளத்தில் அமைக்கப்படுகிறது.
- மேலும் இந்த மேம்பாலம் நேரடியாக உத்தண்டி வரை அமைக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம், நீலாங்கரை மற்றும் அக்கரை ஆகிய இடங்களில் வாகனங்கள் கிழே இறங்கவும் மேல் ஏறவும் சாய்வுப்பாதைகள் அமைக்கப்படுகிறது.
- இந்த சாலை மேம்பாலத்தில் பாதுகாப்பிற்காக ஒலி தடுப்பு சுவர்கள், பாதுகாப்பு தடுப்புகள், பிரதிபலிக்கும் சூரிய சக்தி ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
- சாலை மேம்பாலத்தால் அந்த பகுதியில் உள்ள அக்கரை, நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் பகுதியில் உள்ள சில இடங்கள் 6வழிச்சாலையாக அகலப்படுத்தப்படவுள்ளது.
- 13 கி,மீட்டர் சாலை மேம்பாலத்தில் உயர்த்தப்பட்ட வழித்தடம் முழுவதும் தொடர்ச்சியான எல்.இ.டி. விளக்குகளும், தூண்களுக்கிடையிலான பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை மேம்பாலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு,விரைவான மற்றும் வசதியான பயணம் உறுதி செய்திடவும் வழிவகுக்கும்.























