டிட்வா புயலால் - நெற்பயிர்கள் பாதிப்பு

தமிழகத்தில் டிட்வா புயலால் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதில் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிற்கள் தண்ணீரில் மூழ்கியது. இந்த நிலையில் டித்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டித்வா புயல் காரணமாக மாநிலத்தில் 27.11.2025-லிருந்து 01.12.2025 வரை நாகப்பட்டினம் (22.2 செ.மீ), மயிலாடுதுறை (13.2 செ.மீ), திருவாரூர் (10.2 செ.மீ), இராமநாதபுரம் (8.7 செ.மீ). தஞ்சாவூர் (8.6 செ.மீ) ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Continues below advertisement

 புயல் பாதிப்பு முதலமைச்சர் ஆலோசனை

இன்றையதினம்  முதலமைச்சர் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக டித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையினால். வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள  முதலமைச்சர்  அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், அக்டோபர். 2025 பயிர்பாதிப்புகளுக்கான மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர் வேளாண்பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

Continues below advertisement

 

 உடனே உரிய நிவாரணம் வழங்க உத்தரவு

டித்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.