ஹேமந்த சோரன் கைது நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.






இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், ” ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கை மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பழங்குடியின தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம்  தாழ்ந்த நட்வடிக்கையாகும். விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கை வெளிக்கட்டுகிறது. பாஜகவின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பாஜகவின் அரசியல் யுக்திகளுக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறை தாண்டி பாஜகவுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது” என குறிப்பிட்டுள்ளார்.


ஹேமந்த் சோரன் கைது:


பண மோசடி வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறும் கேள்விகள் எழுப்பபப்ட்டன.


தொடர்ந்து, ஜனவரி 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்-க்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனையை தொடர்ந்தனர். 


இந்த நிலையில், அமலாக்கத்துறை நெருக்கடியை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை அவரை தனது காவலில் எடுத்தது. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சம்பாய் சோரன், முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். முன்னதாக நடைபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.