CM Stalin: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் இறந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.   


நிதியுதவி அறிவிப்பு:


நெல்லை மாவட்டம் நாங்குநேரில் 12ஆம் வகுப்பு மாணவனும், அவருடைய தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிறது. இந்நிலையில், இச்சம்பவத்தில் நேரில் பார்த்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.   இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 


இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன், த/பெ.சுடலைமுத்து (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 


​உயிரிழந்த கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


என்ன நடந்தது?


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி அம்பிகா, ப்ளஸ் 2 படிக்கும் மகனும், 9-ஆம் வகுப்பு பயிலும் மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு  உதவி பெறும் பள்ளியில் அம்மாணவர்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள்.


பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். அதனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் அவரிடம் சாதிய ரீதியான அதிகாரங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் சில நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், பள்ளிக்கு சென்ற அம்மாணவர், ஆசிரியர்களிடம் நடந்ததை சொல்லவும், பிரச்சனைக்குரிய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் அந்த மாணவர்களுக்கு விரோதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி  இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த அம்மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தங்கை, தனது அண்ணன் தாக்கப்படுவதை தடுக்க முயற்சி செய்யும்போது, அவரது  கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மாணவர் வெட்டப்பட்ட தகவல் கேள்விப்பட்ட அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.