மழையில் நனைந்த நெல் மூட்டைகள்


விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக நெல் மழையின் நனைந்து ஈரமாகியுள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Continues below advertisement


இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என கேட்டிருந்தார். 


நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு


மேலும் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்திற்கான அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்துள்ளது. 
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி  பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு.


பிரதமர் மோடிக்கு எதிராக சீறிய முதலமைச்சர் ஸ்டாலின்


கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில்,  இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?


கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.