புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நீக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 


புதுச்சேரியில் பாஜக - என்ஆர் காங்கிரஸ் அரசு தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டணி  அரசுக்கு சுயேச்சை உறுப்பினராக  எம்எல்ஏ அங்காளன் ஆதரவு அளித்து வருகிறார். திருபுவனை தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இவர் தனது தொகுதிக்கு அடிப்படைப் பணிகளை அரசு செய்யாமல் தவிர்த்து வருவதாகவும் மக்கள் நலத்திட்டங்கள் தனது தொகுதியில் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டமன்றம் எதிரே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். 


போராட்டத்தின்போது தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:


’’முதலமைச்சர் எனது தொகுதியை முழுமையாகப் புறக்கணிக்கிறார். நான் பாஜகவிற்கு ஆதரவளிப்பதால், முதலமைச்சர் நான் பரிந்துரை செய்யும் எந்த ஒரு பணிகளையும் ஏற்காமல் இருக்கிறார். என்னுடைய தொகுதியில் எந்த பணியும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக எனக்குத் தெரிய வந்துள்ளது.


புதுச்சேரி ஆட்சியில் வெளிப்படையான தன்மை இல்லை. ஊழல் மலிந்துவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மதுபானத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவதில் பல முறைகேடுகளைக் கையாள்கிறார். பாஜகவின் பணம் தேவை, பாஜகவின் ஆளுநர் தேவை எனக் கூறும் முதலமைச்சர் ரங்கசாமி, பாஜகவில் ஒரு எம்எல்ஏ கூட வளரக்கூடாது. புதுச்சேரியில் பாஜக கட்சி வளரக் கூடாது என நினைக்கிறார். 


இதனால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு முதலமைச்சர் ரங்கசாமி பதவியில் இருந்து நீக்க வேண்டும். ரங்கசாமி பதவியில் இருக்கும் வரை எனது போராட்டம் ஓயாது’’.


இவ்வாறு பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பேட்டி அளித்துள்ளார்.