மகளிர் தினத்தையொட்டி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். 


இதையடுத்து, அவ்வையார் விருதானது நீலகிரியை சேர்ந்த கமலம் சின்னசாமிக்கும், பெண் குழந்தை விருதானது சேலத்தை சேர்ந்த இளம்பிறைக்கும் வழங்கினார். அதன்பிறகு ’பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களே..’ என தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 


அப்போது பேசிய அவர், “என்னுடைய பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களே, எத்திராஜ் கல்லூரியினுடைய ஏற்றமிகு மாணவியர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு மகளிர் தின வாழ்த்துகளோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


காலையிலே இந்த நிகழ்ச்சிக்கு நான் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னால் இன்று மகளிர் தினத்தையொட்டி நம்முடைய பெண் காவலர்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டும் என்ற அந்த நிலையில், குறிப்பிட்ட சிலரை இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லி அதற்குப் பின்னால், இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். ஆகவே, இன்றைக்கு காவலர்களாக மட்டுமல்ல, இங்கு வந்து இந்த அரங்கத்தில் பார்த்தால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இன்றைக்கு மகளிர் எந்த அளவிற்கு இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நான் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


இப்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம் தந்தை பெரியார் இல்லையே, இதைப் பார்த்து ரசிப்பதற்கு இல்லையே என்ற அந்தக் கவலைதான். இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய


இந்த மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மகளிரை வாழ்த்துகிறோம் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய வளர்ச்சி என்பது மகளிர் கையில்தான் இருக்கிறது. அதனால் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.


“மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா' என்றார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள்.


அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்' புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். என்றார்


பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண் ஒரு சமூகத்தை வழிநடத்துபவராக உயர்ந்து நிற்பதையே நாமும் விரும்புகிறோம். ஏன் இந்த நாடும் விரும்பிக் கொண்டிருக்கிறது. அத்தகைய பெண்களைத்தான் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லியிருக்கிறார். அத்தகைய பெண்களை உருவாக்க ஊக்கம் தரும் நாள்தான் இந்த மகளிர் நாள்.


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் "உலக மகளிர் தினம்” கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச்-8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல; மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் அமைந்திருக்கிறது. ஒரு முக்கியமான நாளாக இந்த மகளிர் நாள் விழாவில் இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் பெண்களைக் கண்டறிந்து அவர்களின் சமூகசேவைகளைப் பாரட்டி விருதுகள் குறிப்பாக, அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது இலக்கியம் - மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் டாக்டர் தமிழ்செம்மல் புலவர் ஆர்.கமலம் சின்னசாமி என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சங்ககாலம் முதலே, பெண்கள் உயர்வாகவும், மதிக்கத்தக்கவர்களாகவும் போற்றப்பட்டு வருகின்றனர். அந்தக் காலத்திலேயே பெண்பால் புலவர்கள் மிகுதியாக செய்யுள் இயற்றியிருக்கிறார்கள். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது.


இரண்டு மன்னர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர், அதற்காக தூது போய் அந்தப் போரை நிறுத்தக்கூடிய துணிச்சல் அவ்வைக்கு இருந்தது.


இடையில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் பெண்கள் முடக்கப்பட்டார்கள், அடக்கப்பட்டார்கள். இதில் இருந்து பெண்ணை விடுவிக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது, அதுதான் திராவிட இயக்கம்.


பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா என்று அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்ணினத்திற்கும் அறைகூவல் விடுத்தது திராவிட இயக்கம்.


மாநாடு நடத்தினால் பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்று தந்தை அவர்கள் அழைத்தார்கள். போராட்டம் நடந்தால் தனது மனைவி பெரியார் நாகம்மையாரையும் தங்கை கண்ணம்மாவையும் அழைத்துச் சென்றார் பெரியார் அவர்கள்.


'நாட்டில் நடக்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது" என்று 1922-ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் சொல்லக் காரணமானவர்கள் நாகம்மையாரும். கண்ணம்மாளும்.


இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்துத்தான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள். இன்னும் சொன்னால், தந்தை பெரியார் அவர்களுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தைத் தந்தது யார் என்று கேட்டீர்களென்றால், பெண்கள்தான். வடசென்னை பகுதியில் இருக்கின்ற ஒற்றைவாடி கலையரங்கத்தில் தான் அந்த விழாவை நடத்தி பெண்கள் தான் தந்தை பெரியாருக்கு 'பெரியார்' என்ற அந்தப் பட்டத்தை கொடுத்தார்கள். அது வரையில் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்தான் என்று சொன்னார்கள். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அது வழங்கப்பட்டது.


அதனுடைய 50-ஆம் ஆண்டில்தான், பெரியாருடைய கனவை நனவாக்கக்கூடிய வகையிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கிய தலைவர்தான் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்.


அதேபோல 1938-ல் இந்தி திணிப்பு, அதை எதிர்த்து போராட்டம். அந்த போராட்டத்தில் அதிகமாக பெண்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். கைக்குழந்தைகளோடு பலர் கைதாகி இருக்கிறார்கள். இதை எல்லாம் இங்கே நான் நினைவூட்டுவதற்குக் காரணம், திராவிட இயக்கமானது பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக ஆக்கியது என்பதை இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்.


நிமிர்ந்த நன்னடை - நேர்கொண்ட பார்வை - திமிர்ந்த ஞானச் செறுக்குக்குப் பெயர் பெற்றிருக்கக்கூடிய சிங்கப் பெண்களாக, இந்த இனிய விழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய உங்களையெல்லாம் பார்க்கும்போது, திராவிட இயக்கத்தினுடைய பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயனை எங்களால் கண்கூடாக இங்கே காண முடிகிறது.


இதற்கு வித்திட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் போன்றவர்கள், அதேபோல திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களையும், சாவித்ரி பாய் பூலே, அண்ணல் அம்பேத்கர் போன்ற போராளிகளையும் நன்றியோடு பெண்ணினம் நினைத்துப் பார்க்க வேண்டும்.” என பேசினார்.