தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், குற்றவாளி எந்த கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை பாயும் எனவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 


இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”துறை ரீதியான சாதனையை நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அரசு திராவிட மாடல் அரசு. திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று மக்கள் முடிவெடுக்கும் வகையில்,  இரண்டு ஆண்டு காலமாக ஆட்சியை நடத்தி வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை. விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்வு மூலமாக 1 கோடி பேருக்கு உதவிகள்  செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டதன் மூலமாக இதுவரை 265 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மக்களுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய அரசாக இந்த அரசு செயல்படுகிறது. நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை,  மக்களின் மனங்களையும் வென்று அவர்களுடைய மனதில் குடியிருக்கின்றோம். ஸ்டாலின் அரசாகவோ திமுக அரசாகவோ இல்லை; ஒரு இனத்தின் அரசாக; கொள்ளையின் அரசாக இருக்கிறது. ஆதரித்தாலும் எதிர்த்தாலும் மக்களுக்காகத்தான் பேசுவதாக எடுத்துக் கொள்கிறேன்” என கூறினார்.


மேலும், “மதச்சண்டைகள், கலவரம், காவல் நிலைய மரணங்கள், துப்பாக்கிச்சூடுகள் தமிழ்நாட்டில் இல்லை. அனைத்து துறையிலும் வளர்ச்சி உள்ளது. தமிழ்நாட்டில் சாதி சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. குற்றவாளிகள் எந்த கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை பாயும். காவல் துறை எந்த தடையுமின்றி செயல்பட்டு வருவதால் குற்றச் செயலில் ஈடுபட்டு வருபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். இதனால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த இன்னல்களின்றி செயல்பட அரசு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பீகார், அசாம், மேற்கு வங்காளம்  மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் வண்ணம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வடமாநிலங்களில் இரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று சித்தரித்து காட்டிய சம்பவம் தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்படக்கூடிய பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் நிதிஷ்குமாரை நேரடியாக தொடர்பு கொண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தேன். வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிற மாநில அரசுகளும் பாரட்டின” என குறிப்பிட்டு பேசினார்.