TASMAC Closure: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
Tamil Nadu TASMAC Shop Closure: பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu TASMAC Shop Closure: தமிழ்நாட்டில் செயல்படும் 717 கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த கடைகள் 2 வாரங்களுக்குள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் பாதுகாப்பு, போதையில்லா தமிழ்நாடு என்ற விஷயங்களை தெரிவித்தார். அதன்படி பதவியேற்றது முதல் இந்த 2 விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சட்டவிரோத மது விற்பனை, இயங்கும் மதுபான பார்கள் ஆகியவை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் முதலமைச்சர் விஜய் டாஸ்மாக் கடைகள் பற்றி எந்தவித அறிவிப்பு கொடுக்கவில்லை என்ற கேள்வி பலரிடத்திலும் இருந்தது. மதுவால் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் தொடங்கி பலரும் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர். இது ஒவ்வொரு குடும்பத்திலும் தீரா கவலையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 12, 2026
1/2
தமிழ்நாடு அரசின் மிக முக்கிய நிதி வருவாய்க்கான ஆதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் இருக்கும் நிலையில் அதற்கு மாற்று நடவடிக்கை வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தான் டாஸ்மாக் கடைகள் மூடுவது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















