கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப்புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து பல சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்தது. அதில் கொரோனோ தொற்று குறைந்ததன் காரணமாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட உத்தரவிட்டிருந்தது. 




இதற்கு பொது தீட்சிதர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அரசு ஆணையை செயல்படுத்தினர். அதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதில் ஒரு சிலரின் வெறுப்புப் பிரச்சாரங்களால் தங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். 




அதில், நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்களை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் அதனை சரி செய்வதற்கும் இன்று நாளை இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய வர உள்ளதாக அனுப்பியிருந்தனர். மேலும் ஆய்வின்போது கடந்த 2014 முதல்  கோயில் வரவு செலவு கணக்குகளை சொத்துக்களின் விவரங்களை, பராமரிக்கப்படும் பதிவேடுகளை காண்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தனர். அதற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியிருந்தனர் அதில் கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோயில் பொது தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வருவதாக கூறி  ஆட்சேபனை கடிதத்தை அனுப்பி இருந்தனர். 




தொடர்ந்து, அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலைய துறை சிதம்பரம் நடராஜர் கோயில் மன்னர்களால் கட்டப்பட்டது எனவும், இது அனைவருக்கும் பொதுவான கோயில் என்பதால் இந்து சமய அறநிலைய துறை தலையீடு செய்ய முடியும். எனவே ஒருங்கிணைப்புக்குழு ஆய்விற்கு உறுதுணை அளிக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக பொது தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி பதில் கடிதங்கள் அனுப்பி இருந்த சூழ்நிலையில் நேற்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர் கோயில் மண்டபத்தில் அமர்ந்து தீட்சிதர்களிடையே ஆலோசனை நடத்தினார்.


ஆலோசனையில் இன்று வரும் இந்து சமய அறநிலையத் துறை குழுவினருக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த பொது தீட்சிதர்கள் இது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்படும் என அமைச்சர் தெரிவித்து சென்றார்.




இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலைய துறை குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆய்விற்கு காலை 10 மணியளவில் வருகை புரிய உள்ளனர். 2 இணை ஆணையர்கள், 1  உதவி ஆணையர், மண்டல தணிக்கை அலுவலர் 1, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இவர்களை ஒருங்கிணைத்த துணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை வருகையையொட்டி கோயிலைச் சுற்றி  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.