கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது தீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தை அணுகுவதும், தொடர்ந்து கதையாக இருந்து வரும் சூழலில்,  கடந்த 2014 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் என  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அளித்திருந்தது.  அதன்படி சுமார் 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர். இந்த சூழலில் நாளை ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வரவு செலவுகள் குறித்த ஆவணங்களை தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டபூர்வமாக கோயிலில் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்து சமய அறநிலை துறை மூலம் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஆய்வு  குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட சரிபார்ப்பு அலுவலரும், துணை ஆணையருமான சி.ஜோதி நடராஜர் கோயில் செயலாளரருக்கு  அனுப்பி உள்ள நோட்டீஸில்  2014 முதல் நாளது தேதி வரையிலான வரவு செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், கோவிலில் நடைபெற்ற திருப்பணி குறித்த விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத் துறை அனுமதி விவரம் மதிப்பீடு விவரங்கள், கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் இனங்கள், மேற்கண்ட சொத்துக்களின் தற்போதைய நிலை இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு, பதிவேடு திட்ட பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள் கோயிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் விலை உயர்ந்தவைகளின் மதிப்பீட்டு அறிக்கை, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விபரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும் பொழுது வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.




அறநிலையத்துறையின் இந்த நோட்டீஸை, சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோயில் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் நடராஜர் கோயிலில், தீட்சிதர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், கனகசபை எனப்படும் பொன்னம்பலத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதற்கு தீட்சிதர்கள் தரப்பு குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. 




அதுகுறித்த அடுத்த அறிவிப்பும் நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், தற்போது கோயில் நிர்வாகம் குறித்து சட்டரீதியாக ஆய்வு மேற்கொள்ள உள்ள அறநிலையத்துறையால்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் பரபரப்பை கூட்டும் விதமாக நாளை இந்து சமய அறநிலையத்துறை கோயில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய உள்ள சூழலில் இன்று திடீரென இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிதம்பரம் கோயில் தரிசனம் செய்தார். தொடர்ந்து சிதம்பரம் கோயில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்த அமைச்சர்  கோயில் பொது தீட்சிதர்களிடம் தனியாக ஆலோசனை செய்தார் .




அப்போது நாளை நடைபெறவுள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து தீட்ஷீதர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது அதனை சட்டப்படி எதிர் கொள்வதாக தீட்ஷீதர்கள் தெரிவித்தனர். அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என கூறிய அமைச்சர், அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு காணப்படும் என தீட்சிதர்களிடம் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் தீச்ஷீதர்களுடன்  ஆலோசனை நடைபெற்றது. அப்போது தீட்ஷீதர்கள் தங்களின் நிலைபாடு குறித்து தெரிவித்தனர். அதனையடுத்து அரசின் நிலைபாடு இந்து சமய அறநிலையதுறை சட்டங்கள் குறித்து நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். விரைவில்  சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும் என்றார்.





மேலும், இந்து சமய அறநிலைய துறை கொள்ளைகாரர்களின் கூடாரமாக உள்ளது என மதுரை ஆதீனம் பேசியது குறித்த கேள்விக்கு மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளவே அப்படி பேசியுள்ளார். மற்ற ஆததீனங்கள், ஜீயர்கள், தீட்ஷிதர்கள் நமது அரசோடு இணக்கமாக உள்ளனர். நமது அரசு அமைவதர்கு தீட்ஷீதர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். எனவே ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைகூற கூடாது. அவரது பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலை ஏற்படும், அந்த அளவிற்கு தமிழக முதல்வர் அனைவருக்குமான ஆட்சியை செய்து வருகிறார். ஆத்தீகர்கள், நாத்தீகர்கள் என அனைவருக்கும் சமமான ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி உள்ளது என தெரிவித்தார். நாளை நடைபெறும் ஆய்வு குறித்து கூறுகையில், ஆய்வு குறித்து மூன்று முறை துறை சார்பாக கடிதம் தீட்ஷீதர்களிடம் கடிதம் வழங்கபட்டுள்ளது. அவர்கள் சார்பாகவும் பதில் கடிதம் கொடுத்துள்ளார்கள் அலோசனை செய்து சுமூக தீர்வு காணப்படும் என்றார்.