" அமைச்சர்களை முற்றுகையிட்ட உறவினர்கள் "

சென்னை திருவொற்றியூர் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12 - ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தனுஷ்குமார் , சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 11 இளம் சிறார்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என மொத்தம் 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

இந்த நிலையில் , உயிரிழந்த மாணவன் தனுஷ் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மாணவனின் வீட்டிற்கு வந்தனர்.

பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அமைச்சர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்த போது , அங்கு கூடியிருந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

ஆறுதல் கூற காரணம் என்ன ? அரசியல் செய்கிறீர்களா ?

அரசு பள்ளிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சுலபமாக கிடைப்பதாகவும் , போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய உறவினர்கள் , மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆவேசமாக பேசினர்.

மேலும் , சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை என்றும் , இத்தனை நாட்களாக வராமல் தற்போது மட்டும் ஆறுதல் கூற வருவதற்கான காரணம் என்ன ? அரசியல் செய்கிறீர்களா ? எனவும் அமைச்சர்களை நோக்கி கேள்வி எழுப்பினர்.

அப்போது , போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போதும் , உறவினர்கள் தொடர்ந்து அமைச்சர்களின் காரை நோக்கி சென்றதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து , போலீசாரின் பாதுகாப்புடன் அமைச்சர்கள் இருவரும் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பள்ளியில் முன் கூட்டியே பாதுகாப்பு ?

இதனிடையே , அமைச்சர்கள் மாணவனின் வீட்டிற்குள் சென்ற போது , செய்தியாளர்கள் உள்ளிட்ட மாணவனின் உறவினர்கள் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாணவன் உயிரிழந்த பிறகு அமைச்சர்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கும் போலீசார் , இது போன்ற பாதுகாப்பை பள்ளிகளிலேயே முன் கூட்டியே வழங்கியிருந்தால் எங்களது பிள்ளை உயிரிழந்திருக்க மாட்டான் எனக் கூறி உறவினர்கள் ஆவேசமாக முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது