கடந்த தீபாவளிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதையடுத்து, டிசம்பர் மாதம் முழுவதும் ஓரளவு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


இந்த நிலையில், சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில்


 


 


'மத்திய சென்னையில் கடுமையான மழை பெய்துள்ளது. நுங்கப்பாக்கம், தி நகர் போன்ற பகுதிகளில் 15 செமீ மழை வரை பதிவாகியுள்ளது. சென்னை கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருகிறது. கிழக்கு பக்கத்தில் இருந்து வரும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மழை மேகங்கள் சென்னை கடற்கரை ஓரங்களிலேயே மழையாக பெய்கிறது. 



அதனால் கடற்கரை ஓர பகுதிகளில் பயணம் செய்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். சென்னையின் உள்பகுதியில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் எதிர்பாராத மழை பெய்துள்ளது என்றார். மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெதர்மேன், 2015ம் ஆண்டில் பெய்த வருடாந்திர மழை அளவை இந்த ஆண்டு மழை முந்திவிட்டது.



1996 மற்றும் 2005ம் ஆண்டுகளை தொடர்ந்து இந்த ஆண்டும் நல்ல மழை ஆண்டாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.



திடீரென கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் சென்னையின் முக்கிய சாலைகள், நகரின் குறுகலான பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தி.நகர், வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், பாரிமுனை, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், வில்லிவாக்கம், முகப்பேர், கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் அமைந்தள்ள பல அறைகளின் உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. மேலும், தி.நகர், ஆயிரம் விளக்கும், தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி,விருகம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக நந்தனத்தில் 8 செ.மீ.மழையும், நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.