சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.




அதில், “நீங்கள் என் பள்ளியின் முன்னாள் மாணவி எனத் தெரிகிறது. நானும் உங்களைப் போல வணிகவியல் மாணவிதான். உங்களிடம் ஒரு புகார் அளிக்க வேண்டும். எங்களது ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பில் பல்வேறு மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகிறார். இது ஒருகட்டத்தில் எல்லைமீறி எனது தோழியை சினிமாவுக்கு அழைக்கும் வரை சென்றுவிட்டது. வகுப்பு குழுக்களில் ’பார்ன்’ வீடியோ லிங்க்களைப் பகிர்கிறார். இதுகுறித்து எங்கள் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் எந்தவிதப் பயனும் இல்லை. அதனால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம். இதுபோல நீங்கள் படித்த சமயத்திலும் அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகப் புகார் எதுவும் எழுந்துள்ளதா எனத் தெரியப்படுத்துங்கள். எங்களது சீனியரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.




க்ருபாளி அந்தப் புகாரைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான மேலதிக புகார்கள் எழுந்தன. அதில், “என்னுடைய ப்ராஜெக்டை ஏற்றுக்கொள்வதற்காக என்னைத் தனியாக சினிமா பார்க்க அழைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை வற்புறுத்தினார். இறுதியில் ’நான் உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேன்’ என அருவருக்கும் வகையில் பதில் அனுப்பினார். அவர் உரையாடியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துள்ளேன்’ என தனக்கு அவர் பேசிய ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்திருந்தார்.




இந்தப் புகார்கள் தவிர ஆன்லைன் வகுப்புக்கு அரை நிர்வாணமாக இடுப்பில் துண்டோடு வருவது, மாணவர்களை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய அழைப்பது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய புகார்களும் எழுந்துள்ளன. இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலாக அந்தப்பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இந்த ஆசிரியர் பள்ளியின் பாலியல் குற்றப்புகார்கள் தொடர்பான பிரிவிலும் உறுப்பினராக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

ராஜகோபாலன் மீதான புகாரை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ட்விட்டரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.கனிமொழி உட்பட பலரும் இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.







இது குறித்து பள்ளியை அணுகி விளக்கம் பெற முயன்று வருகிறோம். கிடைக்கும் பட்சத்தில் அதனை செய்தியாக வெளியிடுவோம்

Also Read: ‛வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்’ அன்புடன் மன்றாடிய அருண்ராஜா காமராஜ்!