சவுக்கு சங்கர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர்  உத்தரவு பிறப்பித்துள்ளது.


சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்:


இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர், வ/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு, தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.


சிறையில் சவுக்கு சங்கர்:


அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தமிழ்நாடு அரசு பற்றியும் யூ டியூபில் பரபரப்பான தகவல்களையும், குற்றச்சாட்டையும் கூறி வருபவர் சவுக்கு சங்கர். இவர் யூ டியூப் ஒன்றில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடக்த்தக்கது.