வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 28-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அதே பகுதியில் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு, வரும் 25-ம் தேதி, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ம் தேதி, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ம் தேதி தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும்.?
தமிழ்நாட்டில், நாளை(23.09.25) வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24.09.25 முதல் 28.09.25:
மேலும், வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை.?
வரும் 23, 24-ம் தேதிகளில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வரையிலான சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 25 மற்றும் 26-ம் தேதிகளில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.