தவெக எம்.எல்.ஏ. பல்லவியுடனான மோதலுக்குப் பிறகு சென்னை மேயர் பிரியா, அமைச்சர் ராஜ்மோகனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஆனால் இந்நிகழ்ச்சியில் அவர் பரிதவிப்புடன் இருந்ததாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

தவெக அரசை தவிர்க்கும் மேயர் பிரியா

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் முதலமைச்சரை சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஒரு மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. திமுக தரப்பில் வெற்றி பெற்று மேயரான பிரியா, தான் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் பொருட்டு இதனை செய்கிறார். ஆனால் மக்கள் பணி என வந்துவிட்டால் விருப்பு, வெறுப்பை எல்லாம் ஓரம் கட்ட வேண்டும் என பலரும் அட்வைஸ் வழங்கி வருகின்றனர். 

Continues below advertisement

எம்.எல்.ஏ. பல்லவியுடன் மோதல் 

இதனிடையே கடந்த ஜூன் 4ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் அரசு பள்ளி ஒன்றில் விழா நடைபெற்றது. அதில் அந்த தொகுதி தவெக எம்.எல்.ஏ., பல்லவி, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ. பல்லவியை அவமரியாதை செய்தார். ரிப்பன் வெட்டுவது தொடங்கி குத்துவிளக்கு ஏற்றுவது வரை பல்லவிக்கு பிரியா தடைகளை ஏற்படுத்தினார். இதற்கு அதேநாளில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பல்லவி பதிலடி கொடுத்தார். 

ஆனால் தான் புரோட்டாகால்படி தான் நடந்துக் கொண்டேன் என விளக்கம் கொடுத்தாலும், ஒரு நிகழ்ச்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதியான எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ.,க்குத் தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பலரும் பிரியாவை விமர்சித்தனர். சமூக வலைத்தளத்தில் பிரியாவை, “புரோட்டோகால் பிரியா” என இணையவாசிகள் வசைபாடினர். இதனைத் தொடர்ந்து கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பிரியா தவெகவை சரமாரியாக விமர்சிக்க தொடங்கியுள்ளார். 

ராஜ்மோகன் அழைப்பும்.. பிரியா எஸ்கேப்பும்

இதனிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் 100 சதவிகிதம் பள்ளிகளில் தேர்ச்சியை உற்ய்தி செய்த ஆசிரியர்களுக்கும் வளர்ச்சி நிதி வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு மேயர் பிரியா வர, “அம்மா வர்றீங்களா” என பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைத்தார். அதற்கு பிரியா, “இல்லை.. இல்லை.. நீங்க பேசுங்க. நான் வருகிறேன்” என சொல்லி விட்டு  சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தவெக அரசை விமர்சித்து விட்டு இன்னும் 6 மாதம் எப்படி பதவியில் இருக்கப்போகிறோம் என  ஒருவித பதட்டத்துடன் மேயர் பிரியா இருக்கிறார் என்பது அவரது ரியாக்‌ஷனைப் பார்த்தால் புரியும் என பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.