சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில், தீபாவளி பட்டாசு புகை பெருமளவு சூழ்ந்து கொண்டதால், சென்னையில் தரை இறங்க வந்த விமானங்கள், சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, சென்னையில் தாமதமாக தரையிறங்கின.
சென்னையில் தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி திருநாளான நேற்று, சென்னை நகரில் காலை நேரத்தை விட, மாலை இரவு நேரங்களில், காற்றில் கடுமையான மாசு ஏற்பட்டது. இதற்குக் காரணம், தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், நேற்று காலை நேரத்தில் மழை பெய்து கொண்டு இருந்ததால், அதிக அளவு பட்டாசுகள் வெடிக்க முடியவில்லை. ஆனால் மாலை நேரத்தில் மழை இல்லாமல் இருந்தது. இதை அடுத்து, அரசு அனுமதிக்கப்பட்ட நேரம் ஆன இரவு 7 மணியிலிருந்து, 8 மணிக்குள், ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையம் புகை மண்டலம்
அதைப்போல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகள், குடியிருப்புகளில் உள்ளவர்கள், அதிக அளவிலான பட்டாசுகளை, தொடர்ச்சியாக வெடித்ததால், பட்டாசு புகையால் காற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.
இதைப் போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் எதிர்பார்த்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது போன்றவற்றை மிகவும் கவனமாக கண்காணிப்பு செயல்படுத்தினர்.
வானில் வட்டமளித்த விமானங்கள்
இதை அடுத்து நேற்று இரவு 7 மணிக்கு மேல், சென்னை விமான நிலையத்தில் புகை மண்டலம் அதிகரித்ததன் காரணத்தால், அந்த நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு, உடனடியாக அனுமதி கொடுக்காமல், கட்டுப்பாட்டு வரை அதிகாரிகள், ஓடு பாதைகளை உன்னிப்பாக கவனித்து, ஓடுபாதை மிகத் தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே, தரையிறங்க அனுமதித்தனர். அதுவரையில் அந்த விமானங்களை தொடர்ந்து வானில் வட்டமடித்து பறக்கச் செய்தனர்.
வானில் வட்டம் அடைத்த விமானங்கள்
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் உடனடியாக புறப்பட சிக்னல் கொடுக்காமல், ஓடுபாதையை உன்னிப்பாக கவனித்து, ஓடுபாதை தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே விமானங்கள் ஓடுபாதையில் ஓடுவதற்கு அனுமதி அளித்தனர்.
இதன் காரணமாக அந்த நேரங்களில் சென்னையில் தரை இறங்க வந்த, ஹைதராபாத் கவுகாத்தி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் லக்னோ, மதுரை, டெல்லி, பெங்களூர், டாக்கா, ஆகிய 7 விமானங்கள், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, அதன் பின்பு தரையிறங்கியது.
பாதிப்படைந்த விமான சேவை
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் டெல்லி, கொச்சி, பெங்களூர், கோவை, ஹைதராபாத், தோகா, கோலாலம்பூர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஹைதராபாத் ஆகிய 8 விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதேபோல் பட்டாசு புகை மண்டலம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள், மொத்தம் 15 விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன.ஆனால் விமானங்கள் தரையிறங்க முடியாமல், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவது, அல்லது ரத்து செய்யப்படுவது போன்ற பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.