கள்ளக்குறிச்சியில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவம் முன்பே திட்டமிடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். 


இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை  உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். இதனிடையே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.


அப்போது பேசிய நீதிபதி, கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது என்றும், இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார். மேலும் மாணவர்களின் டி.சி.க்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது என கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரும் ஏன் போராட்டம் நடத்தினீர்கள் என ஸ்ரீமதியின் பெற்றோரிடம் கேள்வியெழுப்பினர். வன்முறை சம்பவம் கட்டுக்குள் வந்தவுடன் வேலை முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என தெரிவித்த அவர், வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். 


 வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் சிறப்பு படை அமைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏற்பட்ட இழப்பீடை வசூலிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 29ம் தேதி போலீஸ் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 


இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்த மாணவியின் தந்தை ஜூலை 14 ஆம் தேதி தான் ஊருக்கு வந்தார் என்றும், வன்முறைக்கு தாங்கள் (ஸ்ரீமதியின் பெற்றோர்) காரணமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் இறப்பின் தவறு இல்லை என்று கூறிவிட்டால், வன்முறையால் ஏற்பட்ட சேதத்தை மீட்டெடுக்க முடியுமா? என நீதிபதி கேள்வியெழுப்பினார். தமிழ்நாடு அமைதி பூங்கா என்கிறார்கள் ஆனால் நீங்கள் அதை முற்றிலும் மாற்றிவிட்டீர்கள் நீதிபதி  சதீஷ்குமார் காட்டமாக தெரிவித்தார். 


ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஊடகங்களுக்கு எந்தப் பேட்டியும் கொடுக்காமல் இருக்க தகுந்த அறிவுரைகளை வழங்குமாறு வழக்கறிஞர்களுக்கு தெரிவித்த  நீதிபதி சதீஷ்குமார், மறு உடல் கூராய்வுக்கு அனுமதியளித்து வழக்கு விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.