அனைத்து அரசியல் கட்சியினரையும் போலீசார் ஒரே விதமாக பார்க்க வேண்டும் எனவும் பாராபட்சம் காட்டக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது. 


அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பாமக போராட்டம் நடத்த திட்டமிட்டது. ஜனவரி 2 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது. இதற்காக போலீஸ் அனுமதி கோரி பாமக சார்பில் டிசம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதற்கு காரணம் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டுமானால் 5 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும் என சொல்லி மறுத்துள்ளனர். 


இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தில், தேசிய கீதம் முதலில் பாடவில்லை எனக்கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். இதை எதிர்த்து திமுகவினர் மறுநாளே போராட்டம் நடத்தினர். இதன் காரணமாகவே பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 


அதில், “பாமக 5 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்த மனு அளிக்கவில்லை என்ற போலீஸ் கமிஷ்னர், திமுகவுக்கு மட்டும் சில மணி நேரங்களில் அனுமதி வழங்கியுள்ளார். விதிகளை மீறிய போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர், டிஜிபி உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 


இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் அனுமதி இல்லாமல் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து பேசிய நீதிபதி, “ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைத்து கட்சியினரையும் போலீசார் ஒரேமாதிரியாக பார்க்க வேண்டும். ஒரே மாதிரியான நடவடிக்கையாக இருக்கவேண்டும். ஒரு கட்சிக்கு மட்டும் ஒரே நாளில் அனுமதி கொடுப்பது, மற்ற கட்சிகளின் கோரிக்கையை கிடப்பில் போடுவது என்ற நிலைப்பாடு கூடாது. 


போராட்டத்தில் இருப்பவர்களின் மனநிலை பற்றி தெரியாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போலீஸ்தான் பதில் சொல்ல வேண்டி வரும். அவர்களைத் தான் குறை கூறுவர். போராட்டத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 


மேலும் பாமக வழக்கில் பதிலளிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டு 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.