தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. கனமழை காரணமாக சென்னை மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.














தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 10, 11, 12ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் 11 மற்றும் 12ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மட்டும் வில்லிவாக்கத்தில் 162 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீட்டரும், புழலில் 111 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.