தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
Anna Salai Saidapet Flyover: சைதாப்பேட்டை - அண்ணாசாலை வரையிலான மேம்பால பணிகளில் தொய்வு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Anna Salai Saidapet Flyover: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மாநகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். மெட்ரோ, மின்சார ரயில் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தும் மக்கள் தொகை காரணமாக தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது.
அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பாலம்:
இதை சமாளிப்பதற்காக பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. பல பணிகள் நிலுவையில் உள்ளது. அவ்வாறு நிலுவையில் உள்ள மேம்பால பணிகளில் முக்கியமானது அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணி ஆகும். சென்னை மாநகரின் மிக மிக பிரதான சாலையான இந்த சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது.
பணிகள் தொய்வு ஏன்?
மின்னல் வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பால பணிகள் மொத்தம் 3.2 கிலோமீட்டர் தொலைதூரம் கொண்டது. இந்த பணிகள் தற்போது வரை 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மேம்பால பணிகள் மந்தமாக நடப்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வெளியிட்ட தகவலில், தற்போது வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் பால பணிகள் நடக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாலத்திற்கான பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். கடும் வெப்பநிலை காரணமாக வரும் ஜுன் 15ம் தேதி வரை பால பணிகளில் சற்று தொய்வு நிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட நேரத்தில் முடியுமா?
வெப்பநிலை காரணமாக பால பணிகள் தொய்வாக இருந்தாலும், தினசரி 400 பணியாளர்கள் இந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மேம்பால கட்டுமான பணி முடிப்பதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதமாக தீர்மானிக்கப்பட்டிருந்த சூழலில், திட்டமிட்ட நேரத்தில் முடிக்கப்படும் என்றே கருதப்படுகிறது.
மேலும், நந்தனம் - தேனாம்பேட்டை இடையே 230 கிலோவாட் மின்சார கேபிள் பூமிக்கு அடியில் செல்வதாலும் பணியின் வேகம் மந்தம் அடைந்துள்ளது. இதுதவிர, கீழே ஆலந்தூரில் இருந்து விம்கோநகர் நோக்கி செல்லும் மெட்ரோ ரயிலும் செல்வதால் மிக கவனமாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் சேவைக்கு எந்த சிரமும் ஏற்படாத வகையில் இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு பல இடங்களில் பால பணிகள் முழுமை அடைந்துள்ளது. மொத்தம் 3.2 கிலோமீட்டர் வரையிலான இந்த மேம்பாலத்தில் பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படாது என்று கருதப்படுகிறது.
பேருந்து, லாரிக்கு நோ அனுமதி:
ஏனென்றால், சைதாப்பேட்டை தொடங்கி அண்ணா மேம்பாலம் வரை செல்லும் இந்த பாலம் செல்வதால் பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தாலும், இரும்பிலே தூண்கள் அமைக்கப்பட்டிருப்பதாலும் பேருந்துக்கு அனுமதி இருக்காது. பேருந்து மட்டுமின்றி லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்கள்,இரு சக்கர வாகனங்கள், வேன்களுக்கு மட்டுமே இந்த பாலத்தில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இந்த பால பணிகள் முடிவடைந்து அமலுக்கு வந்தால் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களிலும், போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ள தருணங்களிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிட்டும் என்று கருதப்படுகிறது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் தவெக அரசு தாமதிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















