செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Chengalpattu: "செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பேனர் விழிப்பு விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்."

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமகவின் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20.02.2026 அன்று இரவு சுமார் 11:30 மணியளவில் செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் சந்திப்பில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த, 19 பேனர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கட்சியினரை கண்டதும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அங்கு இருசக்கர வாகனத்துடன் தப்பிக்க நினைத்த மற்றொருவரை அக்கட்சியினர் சிலர் அடித்துள்ளனர். இதுசம்மந்தமாக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் அன்றைய தினம் புகார் ஏதும் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், 22.02.2026-ம் தேதி 20.02.2026 அன்று நடைபெற்ற சம்பவத்தை முன்னிறுத்தி இருதரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் காயம்பட்ட நபரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தும், மேலும் அரசியல் கட்சியினர் வைத்த 19 பேனர்களை கிழித்து சேதப்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக அவ்வரசியல் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் செய்யூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்தும், இரு வழக்குகளிலும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்களின் விவரம்
இந்நிலையில், காயம்பட்ட கல்லூரி மாணவரின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காயம்பட்ட நபரை அடித்ததற்காக இரண்டு நபர்களையும், மேலும், அரசியல் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்கள் கட்சியினர் வைத்த பேனர்களை கிழித்ததற்கு தூண்டுதலாக செயல்பட்ட ஒரு நபரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்விரு வழக்குகளின் முதற்கட்ட விசாரணையில் இருந்து காயம்பட்ட கல்லூரி மாணவரை அரசியல் கட்சியினர் கடத்தியதாக கூறுவது உண்மைக்கு புறம்பாக மிகைப்படுத்தப்பட்ட புகாராக தெரியவருகிறது.
காவல்துறையினர் இரு வழக்குகளையும் உரிய முறையில் துரிதமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிவரும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது























