Flood Alert: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Chembarambakkam Lake : "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை ( 22-10-2025) 500 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்"

Chembarambakkam Flood Alert: "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை 10 மணியளவில், 500 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது"
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (22.10.2025) நீர் இருப்பு 20.84 அடியாகவும், கொள்ளளவு 2815 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 6 மணி நிலவரப்படி 2170 கன அடியாக உள்ளது.
விரைவாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
கடந்த வாரம் 18.10.2025 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 18.52 அடியாகவும் கொள்ளளவு 2252 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும் நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினாலும், நீர் பிடிப்பு பகுதிகளின் வகைபாடு மாற்றத்தினால் மிகை வெள்ளீநீர் (Flash flood) பெறப்பட வாய்ப்பு உள்ளதினால், நீர்த்தேக்கத்தின் வெள்ள கொள்ளளவை கூடுதலாக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
500 கன அடி நீர் திறப்பு
எனவே, நீர்தேக்க மட்டத்தினை 21 அடியாக பராமரிக்க ஏதுவாகவும் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து, 21.10.2025 மாலை 4.00 மணியளவில் விநாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
தற்போது மழை அளவு கூடுதலாக இருப்பதாலும், ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக இருப்பதாலும், ஏரியிலிருந்து இன்று 22.10.2025 காலை 10.00 மணி அளவில் 500 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
எனவே. ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் சிறுகளத்துர். காவனுர். குன்றத்துர். திருமுடிவாக்கம். வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ?
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால், வெள்ள பாதிப்பு இருக்காது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.





















