மத்திய அரசுப் பணிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர் மட்டத்தில் தட்டிப் பறிக்கும் லேட்டரல் என்ட்ரி முறையைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’சமூக நீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுவதை உறுதிசெய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும்.


சமத்துவமான முறையில் பதவி உயர்வு


லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்; தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர் மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். ஒன்றிய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.


தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும்.


சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துக


அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட - நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும்’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பின்னணி என்ன?


மத்திய அரசுப் பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறை என்பது முன்பில் இருந்தே இருந்து வந்தாலும் அண்மையில் யுபிஎஸ்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.


இந்த பணியிடங்கள் அனைத்தும் முடிவெடுக்கும் நிலையில் உள்ள தலைமை பொறுப்பாகும். எனினும் இது லேட்டரல் என்ட்ரி முறையிலான பணி என்பதால் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படாது. இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்று எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.


இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.