CM Vijay on NEET: “நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிற்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், +2 மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்த அனுமதிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிற்கு முதலமைச்சர் ஜோசஃப் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர், நீட் தேர்வு தொடர்பான பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, அந்த தேர்வை ரத்து செய்து, +2 மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். கடிதத்தில் அவர் என்னென்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.
மத்திய அரசிற்கு அனுப்பிய கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளது என்ன.?
இது குறித்து மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026), கடந்த 03.05.2026 அன்று 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 வட்சம் தமிழக விண்ணப்பதாரர்கள் உட்பட 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் FIR-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் CBI-க்கு மாற்றப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட்தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.
நீட் (NEET) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழிப் பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ் நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், MBBS, BDS மற்றும் ஆயூஷ் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்கவும், ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக“ தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















