புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றினார். கூட்டத்தொடர் முழுவதும் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படாததால் கூட்டத்தொடர் ஒத்திவைப்பப்பட்டது. அதே நேரத்தில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய மாநிலத்தின் பட்ஜெட் ரூ.11 ஆயிரம் கோடிக்கு தயாரிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் முதலமைச்சர் என்.ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு மத்திய அரசு புதுவை அரசின் 2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ரூ.10,600 கோடிக்கு அனுமதி அளித்தது. மேலும், ரூ.400 கோடி கடன் வாங்கிக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கட்கிழமை கூடுகிறது. அன்றைய தினம் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாக சபாநாயகர் செல்வம் உறுதி செய்துள்ளார்.


புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை ;


புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டம் 10ம் தேதி  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியது.  இதற்காக சட்டமன்றத்திற்கு வந்த அவருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்துடன் துணைநிலை ஆளுநர் தனது உரையை பேசத் தொடங்கினார். முன்னதாகவே அவைக்கு வந்த எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இவர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். மேலும் ஆளுநர் உரையாற்றக் கூடாது, பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் வேலை செய்கிறார் என கோஷமிட்டவாறு அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் முன்பு அவர்கள் கோஷமிட்டனர். அப்போது ‘மக்களாட்சி மாண்பை குறைக்காதே, ஆளுநர் பதவி கட்சி பதவியா, பதவி விலகு.. பட்ஜெட் என்னாச்சி.. மாநில அந்தஸ்து என்னாச்சி’ என்று கோஷமிட்டனர். இதனால் சட்டபேரவை 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.




எதிர்க்கட்சி தலைவர் சிவா செய்தியார் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்திற்கு துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். தமிழகத்தைச் சேர்ந்தவர், தமிழ் பேசக்கூடியவர் என்பதால் ஒன்றிய அரசிடம் புதுச்சேரி மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக ஓராண்டு காத்துக்கொண்டிருந்தோம். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அடிக்கடி டெல்லி சென்று பிரதமர், மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசி வந்தார். அதனால் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும், மூடப்பட்ட மில்கள், அரசு நிறுவனங்கள் திறக்கப்படும், சம்பளம் தரப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. முதல்வர் பிரதமரை சந்தித்தால் நிதி கிடைக்கும் என்று கூறினீர்கள். தற்போது முதல்வரும் பிரதமரை சந்தித்து பேசி, கூடுதல் நிதி கேட்டும், மாநில அந்தஸ்து கேட்டும் மனு அளித்துவிட்டு வந்துள்ளார்.


பிரதமரை முதல்வர் சந்தித்த பின்னர் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி கூடுதலாக தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஒன்றிய அரசின் வேண்டப்படாத ஆட்சி நடைபெறவில்லை. அமைச்சரவையில் பாஜக பங்கேற்று கூட்டணி வகிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனாலும் எதுவும் கிடைக்கவில்லை. முழுமையாக பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்று நினைக்கின்றது. இதனால் அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுத்துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பட்ஜெட் என்பது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு, தொடங்குவதுதான். ஆனால் இந்த அரசு சம்பளம் போடுவதற்கான நிதியை பெற அனுமதி பெறுவதற்காக மட்டுமே கூட்டுகின்றது. அரசின் இதுபோன்ற செயல்களை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண