பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பதிவிட்ட தமிழணங்கு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்தார். அதில் வட மொழி ஸ இருந்ததைக் குறிப்பிட்டு இந்தப்பதிவை அவர் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், '' தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன்   ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்” என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்''எனக் குறிப்பிட்டார். 


அவரது பதிவுக்கு பதிலளித்த ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, ,  ''தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது. "ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்






முன்னதாக, நேற்று தமிழணங்கு என தமிழ்த்தாயின் புகைப்படத்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பகிர்ந்திருந்தார். அதில் த, அ, ழ போன்ற எழுத்துகள் பளிச்சென்றும் பல எழுத்துகள் மங்கலாகவும் டிசைன் செய்யப்பட்டிருந்தது.அதில், ஸ வடமொழியும் இடம்பெற்றிருந்தது. இதனக் குறிப்பிட்டே தங்கம் தென்னரசு ட்வீட் செய்திருந்தார். அதற்கு இப்போது அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.