தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பதவி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.


முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி:


அதிமுக - பாஜக உடனான கூட்டணி கடந்த சில ஆண்டுகளாகவே நீடித்து வந்தாலும், இரு கட்சிகள் இடையேயும் கருத்து மோதல் ஏற்படுவது என்பது அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர், அடிக்கடி நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்துக் கொண்டது கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அண்மையில் அதிமுக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தலை பாஜக இன்றியே, அதிமுக தலைமையிலான கூட்டணி எதிர்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக பாஜக என்ன செய்ய உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, கூட்டணி தொடர்பாக இரண்டு திட்டங்களை செயல்படுத்தலாம் எனவும், தமிழக பாஜகவிற்கு புதிய மேலிட பொறுப்பாளரை நிர்ணயம் செய்யலாம் என்றும், பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதிமுக உடன் மீண்டும் கூட்டணி:


முதல் திட்டமாக, அதிமுக உடன் மீண்டும் கூட்டணியை ஏற்படுத்துவதையே பாஜக தேசிய தலைமை விரும்புகிறதாம். அதிமுகவும்,  பாஜக மாநில தலைமையுடன் தான் தங்களுக்கு ஒத்துப்போகவில்லையே தவிர, தேசிய கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என கூறியுள்ளது. இதனால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கலாம் என பாஜக தேசிய தலைமை திட்டமிட்டுள்ளது. அதேநேரம், அண்ணாமலை மாநில தலைவராக இருக்கும் வரை, மீண்டும் இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணி சாத்தியப்படுவது சந்தேகமே என அதிமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்படும் முடிவையெல்லாம் பாஜக எடுக்காது எனவும் கூறப்படுகிறது.


அதிமுக இல்லாத பாஜக கூட்டணி:


அதிமுக உடனான கூட்டணியை மீண்டும் ஏற்படுத்துவது என்பது சிக்கலாக உள்ள சூழலில், அதற்கு மாற்று திட்டத்தையும் பாஜக தயார் செய்து உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக  இல்லாத மூன்றாவது கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக தான், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளது. ஏற்கனவே, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பிரதிபலிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் மற்றொரு பிரதிநிதியாக அறியப்படும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பாஜக பக்கம் பலமாக நிற்கின்றன. ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சியும், திமுக ஆதரவில் இருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவளித்து வரும் பாரிவேந்தரின் IJK - வும் கூட்டணிக்கான பண பலத்தை அதிகரிக்கும். எந்தப் பக்கம் சாய்வார்கள் என்று தெரியாத மதில் மேல் பூனைகளாக பாமகவும், தேமுதிகவும் உள்ளனர். இவர்களை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கும் என தெரிகிறது. இந்த கட்சிகளின் ஆதரவுடன், பாஜக தலைமையிலான மூன்றாவது கூட்டணி தமிழ்நாட்டில் உருவாகலாம்.


பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?


அதிமுக உடனான  பாஜக கூட்டணி முறிந்தது தொடர்பான, ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கட்சி மேலிடத்திற்கு வழங்கினார். மாநில தலைவர் அண்ணாமாலையையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தான், காலியாக உள்ள தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பதவிக்கு நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடன் சுமூகமான உறவு கொண்ட அவர், மீண்டும் கூட்டணியை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க சரியான நபர் என பாஜக தலைமை கருதுகிறதாம். அதோடு, அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு இருப்பது, மற்ற பாஜக தலைவர்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பிரபலமானவராக இருப்பது இதற்கு காரணங்களாக கருதப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாடு பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் மாநில தலைவர் போன்ற பதவிகளுக்கு நிர்மலா சீதாராமனின் பெயர் அடிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேலிட பொறுப்பாளராக நிர்மலா சீதாராமனை நியமிப்பது தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.