Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாரதிய ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த அண்ணாமலை கட்சியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்ணாமலை விலகுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.
அண்ணாமலையும் பாஜகவும்
கர்நாடகாவில் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை 2019ம் ஆண்டு அந்த பதவியை ராஜினாமா செய்தார். பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். 2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு குறுகிய காலத்திலேயே மாநில தலைவர் பதவி கிடைத்தது. 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் பாஜக மாநில தலைவராக மாறிய அண்ணாமலையில் ஒவ்வொரு நடவடிக்கையும் பேசுபொருளாக மாறியது. ஆளும் கட்சியாக இருந்த திமுக தொடங்கி, முதலில் கூட்டணியில் இருந்து பின்பு விலகிய அதிமுகவையும் அரசியல் களத்தில் வெளுத்து வாங்கினார். அண்ணாமலைக்கு ஆதரவாக தனி இளைஞர் பட்டாளமே உருவானது.
இப்படிப்பட்ட நிலையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. அப்போது அண்ணாமலை அதிமுக தலைவர்களை சரமாரியாக சாடியிருந்தார். அண்ணாமலை பொறுப்பேற்றப் பின் கட்சியில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமில்லாமலும் இருந்தது. அதேசமயம் பாஜகவை ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என பலரும் சொல்லி வந்த அந்த கருத்தை மாற்றி புரட்சி செய்திருந்தார். இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டது.
கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கதை
கூட்டணி வைக்க வேண்டும் என்றால் தங்களை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த அண்ணாமலை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றப்பின் அண்ணாமலை முழுவதுமாக ஓரம் கட்டப்பட்டார். பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மறுத்தார். தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அதை வேண்டாம் என தெரிவித்தார். இதனால் அண்ணாமலை என்ன திட்டத்தில் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.
புதிய கட்சி தொடங்க முடிவு
இந்த நிலையில் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றை தொடங்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசியல் களம் விஜய் vs உதயநிதி என மாறிவிட்ட நிலையில் இதுதான் சரியான சமயம் என அவர் நினைத்திருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி சென்றுள்ள அண்ணாமலை அங்கு பாஜக மேலிடத்தில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ம் தேதி அண்ணாமலை பிறந்தநாள் என்ற நிலையில் அன்றைய தினம் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
கட்சிக்குள் வெளிப்பட தொடங்கிய எதிர்ப்பு
இதனிடையே பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஒருவேளை அண்ணாமலை மாநில தலைவராக இருந்திருந்து தேர்தலை சந்தித்திருந்தால் இப்போது அதிமுக கூட்டணி பெற்ற வெற்றிக் கூட கிடைத்திருக்காது. திமுக ஜெயித்த இடங்களில் எங்களுக்கு கிடைத்த ஓட்டுகள் குறைந்திருக்கும். அதிமுகவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில் அங்கும் ஓட்டுகள் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
இதனால் விஜய் தனித்து ஆட்சியமைக்கும் சூழலும் உண்டாக்கியிருக்கும். பாஜகவின் அடையாளம் பிரதமர் நரேந்திர மோடி தான்" என தெரிவித்துள்ளார். இதனால் அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை விலகிய தகவல் வருவதற்கு முன்பே கட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















