ஆரோவில் : அன்னையின் கனவு திட்டமான ஆரோவில் மாத்ரி மந்திர் ஏரியை 20 நாடுகளின் ஆணையர்கள், தூதர்கள் மற்றும் முதன்மை அதிகாரிகள் பார்வையிட்டனர்.


விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் மாத்ரி மந்திர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து வந்த குழுவினர் பார்வையிட்டனர். இந்த குழுவில் உலக வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிறுவன தலைவர் ராஜிவ்குப்தா, ரிலிகேர் செயல் தலைவர் ரஷ்மி சாலியா, மொரிஷியஸ் குடியரசின் உயர்மட்ட ஆணையர் ஹைமன்டாயல் டில்லம், பெலாரஸ் துாதரகம் அலெக்சாண்டர் மோஷ்சோவிடிஸ்,


மங்கோலியா உயர் மட்ட ஆணையர் கன்போல்டு டாம்பாஜாவ், நமீபியா உயர் மட்ட ஆணையர் காப்ரியேல் சினிம்போ, வடமாசிடோனியா உயர் மட்ட ஆணையர் மக்மூத் அப்துலா அல்கானி, லெசோதோ உயர்மட்ட ஆணையர் மரோசா பெடெலோ மாகோபனே, கமரோஸ் தூதரகம் அசின் மசா மசூத், பிஜி உயர்மட்ட ஆணையம் சீமா பால்டர் சிங் உட்பட 20 நாடுகளின் ஆணையர்கள் துாதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.


பின்னர் இக்குழுவினர் மாத்ரி மந்திரில் தியானத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்னையின் கனவு திட்டமான மாத்ரி மந்திர் ஏரியை பார்வையிட்டனர். 30 அடி ஆழம், 100 அடி நீளமுள்ள ஏரி அமைத்துள்ளதால், சுற்றியுள்ள கிராமங்களில் நீர் மட்டத்தை மேம்படுத்துகிறது என ஆரோவில் தரப்பில் விளக்கினர். ஆரோவில் அறக்கட்டளை துணைச் செயலாளர் சொர்ணாம்பிகா, இந்த ஏரி பயன்பாட்டை முழுவதும் விளக்கினார்.


தொடர்ந்து அவர் கூறுகையில், ஆரோவில் அறக்கட்டளை, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. ஆரோவில் என்பது சர்வதேச நகரமாகும். இங்கு மனித ஒற்றுமை 'வசுதைவ குடும்பகம்' என்ற கருப்பொருளில் சோதிக்கப்படுகிறது. இங்கு உலகின் 60 நாடுகளைச் சேர்ந்த 3,000 பேர் வசிக்கின்றனர்.


இங்கு அனைத்து மதங்கள், ஜாதிகள் மற்றும் நாடுகளின் எல்லைகளை மீறி மனித ஒற்றுமை விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சோதனை மனித ஒற்றுமையில் மட்டுமில்லாமல், மாசுபாடு குறைப்பு, கழிவுகள் மேலாண்மை மற்றும் உணவு நிலைத்தன்மை போன்றவற்றிலும் எங்கள் முயற்சிகள் தொடர்கின்றன என வெளிநாட்டவர்களுக்கு விளக்கினார்.