தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் நல்ல வெயிலும் மாலை நேரத்தில் சூறைக் காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. இந்த வானியல் மாற்றம் செப்டம்பர்  மற்றும் அக்டோபர் மாத தொடக்கத்தில்  நிகழக்கூடிய வழக்கமான ஒன்று தான் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது தென்மேற்கு பருவ மழை காலம் என்பதால் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும். தென்மேற்கு பருவ மழை என்பது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை சற்று தாமதமாக ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியது. மேலும் இது இயல்பு நிலை ஒட்டியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.


மேலும் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக வரும் 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை கடந்த  சில வாரங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் மக்களை வாடி வதைத்து வருகிறது. அதே சமயம் மாலை நேரங்களில் வானிலை தலைகீழாக மாறி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த வானிலை மாற்றம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத தொடக்கத்தில் நிகழும் இயல்பான ஒன்று தான் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் இது தொடர்பாக பேசுகையில் பகல் நேரங்களில் அதிகபட்சமான வெயிலின் காரணமாக வெப்பச் சலனம் உருவாகி மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் இயல்பான ஒன்று தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக பதிவானதாகவும் வட கிழக்கு பருவ மழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு குறைவாக தான் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் மாதம் முதல் அதிக மழை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிற்கு கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் சில நாட்களில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கிடைக்கும் மழை படிபடியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Gram Sabha Meeting: “மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்” - கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு..!