Chennai Metro train : இனி பயத்தோடு மெட்ரோ ரயிலில் பயணிக்க தேவையில்லை.! அதிநவீன கருவி அறிமுகம்- அசத்தும் சென்னை மெட்ரோ
Chennai Metro train : மெட்ரோ இரயில்களில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சேலைகள், துப்பட்டா சிக்கி கொண்டால் இழுபடுதலைத் தடுக்கும் வசதி" (Anti-Drag Feature) தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்ட முதல் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் புதிய வசதி
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவை மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என பல முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் ஏறும் போதும் இறங்கும் போது மெல்லிய உடைகளான சேலைகள், துப்பட்டா ஆகியவை சிக்கி விபத்து ஏற்படும் நிலையானது அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் பயத்துடனே மக்கள் ஏறி இறங்கி வந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில் நுட்பத்தோடு மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கதவுகளில் மெல்லிய உடமைகள் சிக்காது
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறுகையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த கட்டம்-1-ல் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில்களில் இழுபடுதலைத் தடுக்கும் வசதி" (Anti-Drag Feature பயணிகளின் மெல்லிய உடமைகள் கதவுகளில் சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும்) பொருத்தப்பட்ட முதல் மெட்ரோ இரயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்று (16.05.2026) தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் தானியங்கி கதவுகள் மூடும்போது ஏதேனும் பொருள்கள் சிக்கிக்கொண்டால் அதைத் தானாகவே கண்டறியும் தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது அதனுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக Anti-rag Feature என்ற புதிய பாதுகாப்பு அம்சம் இந்த கதவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வசதியில், புடவை, துப்பட்டா, பை, பட்டை போன்ற மெல்லிய பொருட்கள் சில நேரங்களில் மெட்ரோ இரயில் கதவுகள் மூடும்போது எதிர்பாராதவிதமாக கதவுகளின் இடையில் சிக்கினால் இந்த புதிய தொழில்நுட்பம் அதை உடனே கண்டறிந்து பயணிகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பாதுகாப்பு வசதி
இந்த அதிநவீன பாதுகாப்பு அமைப்பு, மெட்ரோ இரயில் கதவுகளுக்கு இடையே ஏதேனும் மெல்லிய ஆடைகளோ அல்லது பொருட்களோ மாட்டிக்கொண்டால், அது எந்த திசையில் இழுக்கப்பட்டாலும் அதை உடனடியாகக் கண்டறிந்துவிடும். உடனடியாக மெட்ரோ இரயிலின் பிரேக்குகள் தானாகவே இயக்கப்பட்டு மெட்ரோ இரயில் நிறுத்தப்படும். மாட்டிக்கொண்ட பொருளை வெளியே எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட கதவு திறக்கப்பட்டு கதவில் சிக்கிய பொருள் எடுக்கப்பட்ட பிறகு, மெட்ரோ இரயில் சேவை எவ்விதத் தடங்கலும் இன்றி வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
சென்னை மெட்ரோ இரயிலில் இழுபடுதலைத் தடுக்கும் வசதி" (Anti-Drag Feature) எனப்படும் பாதுகாப்பு அம்சம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மெட்ரோ இரயில் வரலாற்றிலேயே இந்த அதிநவீனப் பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். உலகிலேயே முதல் முறையாக இந்த அம்சம் சென்னை மெட்ரோ இரயிலில் தான் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த வசதிகளுடன் கூடிய முதல் மெட்ரோ இரயில் வெற்றிகரமாகத் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் இயக்கப்பட்டு வரும் மீதமுள்ள 51 மெட்ரோ இரயில்களிலும் "இழுபடுதலைத் தடுக்கும் வசதி" (Anti-Drag Feature) பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புத் தரத்தை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும், அனைவருக்கும் குறிப்பாக பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவதிலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முக்கிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















