School Reopen: ஜூன் 4ல் பள்ளிகள் திறப்பு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெப்ப அலை காரணமாக ஜூன் 4ம் தேதி திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவியர்கள் இலவச பயணம் மேற்கோள்ளும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முழு வீச்சில் பள்ளிகள் திறக்கும் பணிகள்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெப்ப அலை தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாக இருப்பதால் இதனை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தேதியை மாற்றி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அறிவிப்பு
இந்த சூழலில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் திறந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்பதால் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, வரும் ஜூன் 4ம் தேதி அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளது.
2026-2027 கல்வியாண்டு மாணாக்கர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்படும் தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தங்களது இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ,மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்கலாம்.
மேலும் பள்ளி துவங்கும், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ,மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்லவும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















