Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கேட்டு, அண்ணாமலை ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அப்படி என்ன உதவி கேட்கிறார் அண்ணாமலை.?

Continues below advertisement

தமிழ்நாடு அரசியலில் ஒரே நேரத்தில், இரண்டு விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் ஒன்று, கோ பேக், கெட் அவுட் ஹேஷ் டேக்குகள், மற்றொன்று தேசிய கல்விக்கொள்கை விவகாரம். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி அண்ணாமலை ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்.

Continues below advertisement

சிக்கலை ஏற்படுத்திவரும் கல்விக்கொள்கை விவகாரம்

தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் கல்விக் கொள்கை விவகாரத்தில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்திவரும் நிலையில், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெளிவாக கூறிவிட்டது. மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி அளிப்போம் என்று கூறுவது, கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது என்றும் கல்வி நிதியை உடனடியாக விடுவிக்குமாறும் கேட்டு, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்நிலையில், கல்வி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதினார். மேலும், தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி, மத்திய அரசிற்கு பதில் அளித்துள்ளார்.

தமிழக அரசு உதவ வேண்டும் என அண்ணாமலை ட்வீட்

இப்படிப்பட்ட சூழலில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, நீண்ட ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், மத்திய அமைச்சரின் கடிதத்திற்கு, தமிழக அரசு வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, இந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மத்திய அரசு இந்தி மொழியை மட்டும் மூன்றாவது மொழியாக கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், உடனடியாக வேறு இந்திய மொழிகளை கற்பிக்க திமுக அரசு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்றும், ஆனால் அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கலாம் என்றும் கிண்டலாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் முதுழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, எந்த மொழியை அவர்கள் கற்க விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

அதோடு, தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, அண்டை மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் திமுக அரசு உறுதி செய்யலாம் என கேட்டுள்ளார்.

இறுதியாக, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என அண்ணாமலை கோரியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola