அண்டை மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நிலையில் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அமைதியாக இருப்பது ஏற்க முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் உயர்மின் கோபுர விளக்கின் செயல்பாட்டினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தொடங்கி வைத்தார்.

 

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 

 

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சி. மனித குலத்துக்கே இது பேரிழப்பு. அவர் சாதாரண பாட்டாளி குடும்பத்தில் பிறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு உலகத் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து ஆசி பெறும் நிலைக்கு உயர்ந்தது தமிழர்களுக்கு பெருமை. ஆன்மீகத்தில் மட்டுமன்றி கல்வியிலும்  பல நிறுவனங்களை நிறுவி  ஏழைகளுக்கு கல்வி கொடுத்தவர். கருவறைக்குள் சாதாரண மக்களும் செல்லலாம், பூஜை செய்யலாம் என்ற ஆன்மீக புரட்சியை செய்தவர். குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே ஆன்மீகத்தில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் பாட்டாளி குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு அருளையும், ஆசிர்வாதத்தையும், ஆன்மீகத்தையும் கொடுத்த அவரது இழப்பு ஈடுகட்ட முடியாதது. அவரது பக்தர்களுக்கும், குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் அவருடைய குடும்பம் தான். பங்காரு அடிகளார் மறையவில்லை, சித்தராக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

 

தமிழகத்தில் நிறைய இடங்களில் நெடுஞ்சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது. வந்தவாசி பகுதியில் உலக வங்கி கடன் பெற்று அமைத்த சாலையிலும் பல இடங்களில் தரமின்மை காணப்படுகிறது. அதேபோல, நெடுஞ்சாலை அமைக்கும்போது நிறைய இடங்களில் திட்டமிட்டு, ‘அண்டர் பாசிங்’ அமைப்பதன் மூலம் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். 

 

காவிரி பிரச்சினை தமிழகத்தின் உயிர்நாடியான பிரச்சினை. இது விவசாயம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை, குடிநீர், வாழ்வாதாரம், தொழிற்சாலை அனைத்தும் இந்த ஆற்றை நம்பித்தான் உள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு கிடைக்காது. இது தொடர்பான நடவடிக்கை வேகமாக இருக்க வேண்டும். கடிதம் எழுதுவதும், தீர்மானம் நிறைவேற்றுவதும் போதாது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

ஓசூர் அருகிலும், சிவகாசி உள்ளிட்ட இடங்களிலும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணம் அதிகாரிகள் தான். பாதுகாப்பு முறைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய விபத்துகள் தான். அதற்கு அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளோம். அதிகாரிகளிடமும் பேசி வருகிறோம். கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது சாதி மற்றும் வன்னியர் பிரச்சினை இல்லை, சமூக நீதி தொடர்பான பிரச்சினை.

 

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர் சமுதாயங்கள் தான் மிகப்பெரிய சமுதாயங்கள். இவ்விரு சமூகங்களும்  வளர்ந்தால் தமிழகத்தின் 40 சதவீத மக்கள் வளர்ச்சி பெறுவர். இந்த சூழலில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சமூக நீதி பேசும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தாமதம். இது தொடர்பாக முதலமைச்சர் அமைதியாக இருப்பதை ஏற்க முடியவில்லை. தமிழகத்தில் சமூக நீதியை பெரியார் தான் தொடங்கி வைத்தார். அதை பின்பற்றும் கட்சிகள் சமூக நீதியை பேசினால் மட்டுமே போதாது. அதனை செயல்படுத்த வேண்டும். தேர்தல் அறிவித்த பிறகே பாமக தனித்துப் போட்டியா என்பது குறித்து தெரிவிப்போம் என தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி எம் எல் ஏ வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.