தமிழகத்தில் ஆசிரியர்கள் தகுதி தேர்வு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்தியாவில் ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற நிலை நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு சேர போட்டி தேர்வில் பங்கேற்க முடியும். இதற்கு முன் TET  தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பொது பிரிவினருக்கு 60 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது தேர்வு நடைபெறும் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கணக்கிடப்பட்டனர். 

இதே போல பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படும். இதற்கிடையே தான் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 நடைபெற்ற டெட் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதற்கான ரிசல்ட் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் ஆசிரியர்கள் தகுதி தேர்விற்கான மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகவும், தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தது. எனவே தகுதி தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 

தகுதி மதிப்பெண்கள் குறைப்பு

இந்த  நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மதிப்பெண்கள் 5 % குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு 55 சதவிகத்தில் இருந்து 50% மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 150 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக கணக்கிடப்படும்.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் அல்லது 150 மதிப்பெண்களுக்கு  60 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சியாக எடுக்கப்படும். அதேநேரம் பொதுப் பிரிவினருக்கு ஏற்கனவே இருந்த 60% தேர்ச்சி மதிப்பெண் அதாவது 90 மதிப்பெண்கள் பாஸ்மார்க்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என கூறப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக, பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்,

பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது. இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.