மாயனூர் கதவணை அருகே 98 ஆண்டுகள் பழமையான கும்ப குழி பாலம் சரிந்து, அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


கரூர் மாயனுார்  கட்டளை பகுதிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் கரையோர பகுதியில் 'கும்ப குழி' என்ற இடத்தில் கடந்த 1924 ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிகால் பாலம் கட்டப்பட்டது. 98 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தின் வழியாக, கட்டளை முதல் மாயனுார் வரை பொது மக்கள் வாகனங்களில் சென்று வந்தனர்.




 


மேலும், வலது பகுதியில், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் வடிகால் நீர், மழைநீர் ஆகியவை கும்பகுழி வடிகால் வாய்க்கால் மூலம், காவிரியாற்றில் கலக்கும். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், கட்டளை மேட்டுவாய்க்கால் உள்பட நான்கு கிளை வாய்க்கால்களுக்கு காவிரியாற்றில் இருந்து தாமாகவே தண்ணீர் செல்லும் வகையில், சிறிய தடுப்பணை அமைக்கப்பட்டது.


 



 


தொடர்ந்து, கடந்த 2013இல் மாயனூர் கதவணை கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. காவிரியாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது, கும்பகுழியில் உள்ள வடிகால் வாய்க்காலுக்குள் தண்ணீர் எதிர் திசையில் பாய்ந்ததால், விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.




 


இதனால், காவிரியாற்றில் இருந்து, கும்பகுழி வடிகாலில் தண்ணீர் செல்லாத வகையில் பால பகுதியில் ஷட்டர்கள் அமைத்து தடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று  இரவு மழை பெய்த போது கும்பகுழி வடிகால் பாலத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. இதையடுத்து, கட்டளை - மாயனூர் சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இருபக்கமும் வாகனங்கள் செல்லாத வகையில், மணல் மூட்டைகள் வைக்கப்பட்டன. இதனால், மாயனூரில் இருந்து கட்டளை, ரங்க நாதபுரம், மேலமாயனுார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு, செல்லும் பொதுமக்கள் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றி சென்றனர்.