TTV Dhinakaran: யாராது கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்னால் ஏமாறாதீங்க.. டிடிவி தினகரன் அட்வைஸ்!
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் தினம் ஒரு மாற்றத்தைச்

யாராவது கட்சிஆரம்பிப்பதாக சொன்னால் ஏமாறாதீர்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “அம்மா, அம்மா என்றவர்கள், அம்மா தான் தெய்வம் என்றவர்கள், அம்மாவின் ஆட்சி வேண்டும், அம்மாவின் கட்சியின் நாங்கள் ஒன்றுகூடுவோம் என சொன்னவர்கள் எல்லாரும் திமுகவின் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டு வருவது என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு கட்சி தொடங்கி அதனை பதிவு செய்யவே குறைந்தப்பட்சம் 6 மாதங்களாகும். அடிப்படையில் அக்கட்சியில் குறைந்தது 100 பேராவது உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
என்னதான் சம்பந்தப்பட்டவர்கள் அவசரப்படுத்தினாலும் 3 மாதங்களில் அது நடக்காத காரியம். எனவே யாராவது கட்சிஆரம்பிப்பதாக சொன்னால் ஏமாறாதீர்கள். திடீர் இட்லி, திடீர் சாம்பார் மாதிரி திடீர்னு கட்சி தொடங்குவோம். வேட்பாளர்களை அறிவிப்போம் என சொல்கிறார்கள்.
திமுக அதிமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களை எல்லாம் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். அந்த தனி நபர்கள் அங்கு போய் சேர்வதால் அவர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி வருவதை இங்கு தடுக்க முடியாது என கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் மிகப்பெரிய அளவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் மாற்றுக்கட்சியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதிமுகவில் ஓபிஎஸ் அணியி இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார். அவர் என்ன மாதிரியான முடிவெடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தனது 88 வயதில் எம்ஜிஆர்-அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதனையெல்லாம் தான் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இப்படியான நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக, தமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இருந்த நிலையில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தேமுதிகவும் திமுக கூட்டணிக்குள் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.























