Cricketer Natarajan: 'நான் நடந்துவந்த பாதை எல்லாமே முள்ளா இருந்தது' - கிரிக்கெட் வீரர் நடராஜன் ஓபன் டாக்.

முள் என்று நினைத்திருந்தால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது என மாணவர்களிடையே நடராஜன் பேச்சு.

Continues below advertisement

சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது‌. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்து. 

Continues below advertisement

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "எந்த விஷயத்தையும் தடையாக நினைக்க கூடாது. ஒரு வருடம் என்னால் விளையாட முடியவில்லை. இப்பொழுது தான் வாழ்க்கை தொடங்கியது. ஆனால் அதற்குள் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆனது எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது.

நல்ல நண்பர்கள் எப்பொழுதும் சுற்றி இருக்கும் பட்சத்தில் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் என்னை சுற்றி கிடைத்தார்கள். நான் செய்கின்ற கடினமான உழைப்பு கடவுள் கொடுத்த வரம். தன்னம்பிக்கையோடு போராடியதால் எங்கெல்லாம் நான் துவண்டு போகிறேனோ, அங்கெல்லாம் என்னை தோள் கொடுத்து தூக்கியவர்கள் நண்பர்கள் மற்றும் உடன் இருந்தவர்கள் என்றார். 

சில பேருக்கு பாடல் கேட்பது பிடிக்கும், தனிமையில் அமர்ந்திருப்பது பிடிக்கும். ஆனால் எனக்கு சில நபர்கள் ஊக்கப்படுத்துவது பிடிக்கும். வாழ்க்கையில் அதிக அளவில் கஷ்டப்பட்டு உள்ளேன். பேருந்துக்கு செல்ல கூட என்னிடம் பணம் இருக்காது‌. கிரிக்கெட் விளையாட்டின் மூலம் வரும் பணத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்தேன். அனைவருக்கும் ஒரு திறமை உள்ளது.

எனக்கு தெரிந்து நிறைய நபர்கள் தற்பொழுது விளையாட்டில் சாதித்துள்ளனர். ஆனால் நகர வாழ்க்கை சென்றவுடன் அவர்களுடைய வாழ்க்கை தரம் மாறி விடுகிறது. உங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள் விளையாட்டுத்துறை அல்ல எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் சாதிக்கலாம். அதற்கு நீங்கள் ஓட வேண்டும் இடையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் உன்னுடைய இலக்கை நோக்கி ஓட வேண்டும். கிராமத்தில் நிறைய சொல்லுவார்கள், விளையாட்டில் என்ன இருக்கு பொய் குடும்பத்தை காப்பாற்று என்று என்னை கூட சொல்லி இருந்தார்கள். கிராமப்புறத்தில் யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள். விளையாட்டு துறையில் பல்வேறு வாய்ப்புகள் வந்துள்ளது. இப்பொழுது இருக்கும் மாணவர்கள் அதை பயன்படுத்துவதில்லை, காரணம் தற்போது காலநிலை மாறிவிட்டது. முன்பு பள்ளி முடிந்து சென்றவுடன் எங்கு மைதானம் உள்ளது என்று தேடி சென்று விளையாடுவார்கள். ஆனால் தற்பொழுது பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றதும் செல்போனை எடுத்து விளையாடுவது முழு வேலையாக வைத்துள்ளனர்.

டிவி முன்பு அமர்ந்து அவர்களின் முழுமையான நேரத்தை செலவிடுகின்றனர் என்ன ஆக வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். உடல் உழைப்பு எதுவுமே கிடையாது. இதனால் அவனுடைய உடல் பாதிக்கப்படுகிறது குழந்தைகள் கூட வீட்டிற்கு சென்றவுடன் மொபைல் போன் என்பது நம்முடைய தேவைக்கு மட்டும் தான் நம்மளை அடிமைப்படுத்தி விடக் கூடாது. அதனை ஒதுக்கி வைக்கப் பாருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஒவ்வொரு படிக்கல்லும் ஒவ்வொரு முள்ளு தான். நான் நடந்து வந்த பாதை எல்லாமே முள்ளாக தான் இருந்தது. நான் அதை முள் என்று நினைத்திருந்தால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது. நான் படிகின்ற பொழுது பயிற்சி பெறுவதற்கு கூட இடம் கிடையாது. வெறும் காலில் மூன்று, நான்கு வருடங்கள் ஓடி உள்ளேன். எனக்கு என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் நான் பயன்படுத்துவேன். விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் நல்ல உணவு அருந்த வேண்டும் பல்வேறு உபகரணங்களை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். எங்கள் வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதுதான் நல்ல சாப்பாடு அம்மா கையில் சாப்பிடுவது தான் என்னுடைய நல்ல சாப்பாடு என்றார்.

கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைமைக்கு போக முடியும். விளையாட்டாக இருந்தாலும் சரி படிப்பாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி தினமும் ஒரு மணி நேரமாவது விளையாட்டு மைதானத்தில் விளையாடுங்கள் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும். இந்த காலகட்டத்தில் உணவு முறைகள் முழுமையாக மாறிவிட்டது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை விட மாட்டேன். எவ்வளவு தோண்டுபோனாலும் தன்னம்பிக்கை விட மாட்டேன். எவ்வளவு பெரிய உயர்வுக்கு சென்றாலும் உங்களால் முடிந்த வழிகாட்டுதலை மற்றவருக்கு செய்யுங்கள்" என்று பேசினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola