AIADMK : திமுக அரசினைக் கண்டித்து வரும் டிசம்பர் 9, 12, 13 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். 


உண்ணாவிரதப் போராட்டம்:


திமுக அரசைக் கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த உண்ணாவிரப் போராட்டமானது கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமியும் கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


இதில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச்செயளாலர் எடப்பாடி கே பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மிகவும் கடுமையாக சாடினார்.


அந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது: சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள  பேரூராட்சிகளில்  போராட்டம் நடைபெறும் எனவும்,  13ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சிகளில் போராட்டம் நடைபெறும்,  12ஆம் தேதி ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக அரசினைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். 


18 மாத ஆட்சி:


மேலும், அவர் பேசுகையில்,18 மாத விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்கள் அத்தனையும் கண்டித்து இந்த  உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு மக்கள் வயிற்றெச்சல், கோபத்தை உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர்.


18 மாத விடியா திமுக ஆட்சியில் என்ன நன்மை ஏற்பட்டுள்ளது. என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பம்தான் அடைந்துள்ளனர். ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர், திறமையில்லாத முதலமைச்சர். மேலும், ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதற்கு 18 மாத கால ஆட்சியே சாட்சி.  தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் கார்ப்ரேட் ஆட்சி நடக்கிறது. ஒரு கம்பெனி தமிழ்நாட்டினை ஆட்சி செய்கிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி எனப் பேசினார். 


ஸ்டாலினால் தடுக்க முடியாது


மேலும், “சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மக்கள் மீது சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. 53 சதவீதம் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படிப்படியாக உயர்த்தலாம் ஆனால் திமுக அரசு அதனைச் செய்யவில்லை. தொழில் வளம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றிவிட்டார்கள். கம்பி, சிமெண்ட் விலை உயர்வால் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும். பொய் வழக்கால் அதிமுகவை முடக்க முடியாது. அதிமுகவின் வளர்ச்சியை ஒரு ஸ்டாலின் மட்டும் இல்லை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது” எனவும் ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைப் போலவே, கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் போராட்டம் நடைபெற்றது. மேலும், நாளை  ஊராட்சிகளிலும், நாளை மறுநாள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் போராட்டம் நடைபெறவுள்ளது.