அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் முன்பு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதுசூதனன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல் நலக்குறைவும், மூச்சுத்திணறும் தொடர்ந்து இருந்து வந்தது. வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே மதுசூதனன் உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக விளக்கம் அளித்த அதிமுக, ''கழக அவைத்தலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்'' எனக் குறிப்பிட்டிருந்தது. 






இதையடுத்து அவரை சந்திக்க சசிகலா அப்போலோ விரைந்தார். மருத்துவமனைக்குக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''அதிமுக மீது பற்றுக்கொண்டவர் மதுசூதனன். அவர் நலம் பெறவேண்டுமென்று பிரார்த்தனை செய்துவிட்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன்'' என்றார்


அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தன்னுடைய வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அவர் வருகை தந்தார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் அப்போலோவில் மதுசூதனன் உடல் நலம் பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஒரே நேரத்தில் ஈபிஎஸ் மற்றும் சசிகலா அப்போலோ வளாகத்தில் இருந்ததால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.