EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணி மீண்டும் இணைந்த நிலையில், சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ்-ஐ சந்திக்காத நிலையில், அவரை சமாதானப்பத்தும் முயற்சியும் தோல்வியடைந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவு வெளியான நிலையில், தேர்தலில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவில் கோஷ்டி உருவானது. இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் என பிரிந்த நிலையில், இன்று இரு அணியும் மீண்டும் இணைந்தன. ஆனால், அதில் சி.வி. சண்முகம் மட்டும் தனித்து நிற்கிறார். இந்நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. மேலும் அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அரசியலில் அவரது எதிர்காலம் என்ன.? அலசுவோம்.
தேர்தலுக்குப் பின் அதிமுகவில் எழுந்த பிரச்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பெற்ற திமுக கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமந்தது. ஆனால், அதிமுக 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுகவில் பிரச்னை ஏற்பட்டு, இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்தது. அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் நடந்த தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏ-க்கள், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவியை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. அதோடு, தவெகவிற்கு சாதகமான வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பு சபாநாயகரிடம் முறையிட்டது. அதேபோல், இபிஎஸ் தரப்பு 22 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வேலுமணி அணியும் மனு அளித்தது.
சமாதானமாகி இணைந்த அதிமுகவின் இரு அணிகள்
இந்த சூழலில், வேலுமணி தரப்பிற்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் அந்த அணியை கண்டுகொள்ளவே இல்லை. இதனிடையே, வேலுமணி தரப்பிலிருந்து 4 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வேலுமணி அணி, எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து, சமாதானம் பேசி, மன்னிப்பு கடிதம் வழங்கி, மீண்டும் ஒன்றிணைந்தனர். அதைத் தொடர்ந்து, சபாநாயகரையும் கூட்டாக சந்தித்த அனைத்து எம்எல்ஏ-க்களும், முன்னர் வழங்கப்பட்ட மனுக்களை வாபஸ் பெற்றனர்.
பின்னர் பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, தங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு மட்டுமே, பிளவு கிடையாது என்றும், தாங்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதால், கருத்துவேறுபாடுகள் நிங்கி, சமாதானமடைந்து மீண்டும் இணைந்துவிட்டதாகவும், இனி எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.
வேலுமணி அணியுடன் செல்லாத சி.வி. சண்முகம் - சமாதான முயற்சியும் தோல்வி.!
ஆனால், எடப்பாடியை சந்தித்தபோதோ, சபாநாயகரிடம் சென்றபோதோ, அந்த குழுவுடன் சி.வி. சண்முகம் மட்டும் செல்லவில்லை. இதனால், கோபமாக உள்ள அவரை சமாதானப்படுத்துவதற்காக, அவரது இல்லத்திற்கு சென்ற தங்கமணி, அவரை எம்ஆர்சி நகர் அலுவலகத்திற்கு தனது காரிலேயே அழைத்து வந்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், எஸ்.பி. வேலுமணியும் சென்று சிவி சண்முகத்தை சந்தித்து பேசினார்.
ஆனால், கடைசி வரை அவர் சமாதானமாகாமல் ஆவேசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தான் ராஜினாமா செய்யப் போவதாக நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரது அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை அவரும் தவெகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் நிலவுகிறது. ஆனால், விஜய் அவரை சேர்த்துக்கொள்வாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இதனால், சிவி சண்முகத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற பெரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















